இந்த வாழ்க்கையில் வலியையும் வறுமையையும் தன் வாழ்வில் நேரில் சந்தித்த ஒருவரால்தான், அடுத்த மனிதனின் கண்ணீரில் இருக்கும் வேதனையைத் தன் இதயப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.
வாழ்க்கை என்பது வெறும் சுகங்களின் தொகுப்பல்ல - சொல்லப்போனால் அது சோதனைகளைக் கடந்து நாம் அடையும் முதிர்ச்சியிலும், பிறரின் துயரம் துடைக்கும் பேரன்பிலும்தான் தன் முழு அர்த்தத்தையும் கண்டடைகிறது.
பனிக்காலத்துக் கரடிகள் குகைக்குள் ஒளிந்து கொள்வதைப் போல, தோல்வி அடைந்த அடுத்த கணமே நம் மனது உலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு ஒரு நீண்ட 'ஹைபர்னேஷன்' தூக்கத்திற்குள் சென்றுவிடுகிறது. "மறு உத்தரவு வரும் வரை சிஸ்டம் இயங்காது" என்று மூளைக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டு, போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துவிடுகிறது.
யாராவது வந்து "அடுத்த பிளான் என்ன? அடுத்து என்ன பண்ணப் போற?" என்று கேட்டால், உள்ளிருந்து "தவறான எண், தயவுசெய்து பிறகு தொடர்பு கொள்ளவும்" என்கிற அளவிலான மௌனம் மட்டும்தான் பதிலாக வரும். ரீல்ஸ் பார்ப்பது, வெற்றுச் சுவரை வெறிப்பது என மனது முழு ஓய்வில் இருக்கும்.
இந்தத் தூக்கத்தை யாரும் சோம்பேறித்தனம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. அது மனதின் ஒரு தற்காப்பு உத்தி (Defense mechanism). அடிபட்ட சிங்கம் குகையில் பதுங்கித் தன் காயங்களை நாவால் ஆற்றுவதைப் போல (கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் இதுதான் உண்மை!), மனது தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஒரு 'ரீசார்ஜ்' காலம் இது.
இந்த ரீசார்ஜ் நமக்கு தேவைப்படுகிறது மக்களே , நம்முடைய உலகம் மிகவும் பெரியது, நமது சக்திகளை குறைத்துக்கொண்டு சட்டையை மடித்து சண்டைக்க வருவது என்பது செம்ம டேஞ்சர் என்றுதான் நம்முடைய மனது நினைக்கிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக