Tuesday, July 9, 2024

MUSIC TALKS - SATHTHAM ILLATHA THANIMAI KETTEN YUTHTHAM ILLLATHA ULAGAM KETTEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !







சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் 
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் 
ஒற்றை கண்ணீர் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் 
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் 
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன் 
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் 
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன் 
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன் 
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன் 
கிடந்து உருள புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன் 
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் 
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் 
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் 
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் 
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் 
எரியும் தீயாய் கவிதை கேட்டேன் 
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் 
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் 
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் 
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் 
அழுதால் மழை போல் அழவே கேட்டேன் 
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் 
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் 
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் 
ராஜராஜனின் வாளைக் கேட்டேன் 
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றை கேட்டேன் 
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோளை கேட்டேன் 
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் 
தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் 
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன் 
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் 
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் 
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் 
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் 
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை 
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று 
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

No comments:

Post a Comment

MUSIC TALKS - UN MELA AASAIPATTU ULLLUKKULLE VIRUPPAPATTU VAAGIKKAREN KOORAI PATTU KATTIKIRIYAA ! UNNALA URAKKAM KETTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன...