வாழ்க்கை என்பது ஒரு அழகான ஓவியம் என்று நினைத்து ஆரம்பத்தில் நாம் அனைவரும் "அன்பாகப் பழகுதல்" என்ற அந்த முதல் பரிமாணத்தில் தான் குதிக்கிறோம். அங்கே எல்லைகளே கிடையாது; இதயத்தை அப்படியே திறந்து வைத்துவிட்டு, வருபவர் போகுபவர் என அனைவருக்கும் 'சிவப்புக் கம்பள' வரவேற்பு அளிக்கிறோம்.
"நமக்குத் தெரிந்ததைச் சொல்வோம், அவர்களுக்குத் தேவையானதைச் செய்வோம், உண்மையாக இருப்போம்" என்று ஒரு சினிமா நாயகன் ரேஞ்சுக்கு நாம் காட்டும் அந்த அதீத அன்புதான் நமக்கே வினையாக முடிகிறது. உதாரணமாக, ஒரு அலுவலக நண்பரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினையைப் பகிர்ந்து கொள்வீர்கள், அவரோ அதை மதிய உணவு இடைவேளையில் மற்றவர்களிடம் 'கதை'யாக மாற்றுவார்.
அல்லது, ஒரு உறவினருக்குப் பண உதவி செய்வீர்கள், ஆனால் திரும்பக் கேட்கும்போது அவரே உங்களை ஒரு அந்நியனைப் போலப் பார்ப்பார். இந்த முதல் பரிமாணத்தில் நாம் சிந்துவது வியர்வை அல்ல, ரத்தம்.
இந்தத் துரோகங்களும், ஏமாற்றங்களும் நம்மைச் சின்னாபின்னமாக்கி, இதயத்தில் ஆயிரம் தழும்புகளை ஏற்படுத்திய பிறகுதான், "அளவாகப் பழகுதல்" என்ற அந்த இரண்டாவது ஞானோதயம் பிறக்கிறது. இது ஒரு பாதுகாப்பு அரண் போன்றது. இங்கே நாம் ஒரு 'செக் போஸ்ட்' வைக்கிறோம். யாரிடம் எவ்வளவு பேச வேண்டும், யாரை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்ற அந்தப் பக்குவம் அடிபட்ட காயங்களில் இருந்துதான் கசியத் தொடங்குகிறது.
முன்பு போல எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்காமல், "நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா?" என்ற அந்த ஒற்றை வரியோடு நிறுத்திக் கொள்ளப் பழகுகிறோம். இது ஒருவகையான தற்காப்புக்கலை. ஒரு மொபைல் போன் பாஸ்வேர்ட் போல, நம்முடைய அந்தரங்கத்தையும், பலவீனத்தையும் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைப்பதன் அவசியத்தை இந்த இரண்டாவது பரிமாணம்தான் நமக்குக் கற்றுத் தருகிறது.
வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பரிமாணங்களுக்கு இடையிலான மாற்றம் ஒருபோதும் இனிமையாக இருப்பதில்லை. அன்பால் காயப்பட்டு, கண்ணீரோடு ஒரு மூலையில் அமர்ந்து, நம்மையே நாம் நொந்து கொண்ட பிறகுதான் இந்த 'அளவான பழகும்' முறை கைவருகிறது.
"ஏன் அன்று அவ்வளவு பேசினேன்?", "ஏன் அவனிடம் அந்த ரகசியத்தைச் சொன்னேன்?" என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் தான் நம்மை மாற்றுகின்றன. இப்போது நீங்கள் அமைதியாக இருக்கும்போது, உலகம் உங்களை "மாறிவிட்டாய்" அல்லது "திமிர் பிடித்தவர்" என்று சொல்லக்கூடும்.
ஆனால், சின்னாபின்னமான ஒரு இதயத்திற்குத் தெரியும், அந்தத் திமிர் தான் உங்களை மேற்கொண்டு சிதையாமல் காப்பாற்றுகிறது என்று. மொத்தத்தில், அடிபடாமல் யாரும் இந்த இரண்டாவது பாடத்தைக் கற்றுக் கொள்வதில்லை; இது அனுபவம் தந்த ஒரு கசப்பான மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக