Thursday, April 10, 2025

GENERAL TALKS - நமக்காக கஷ்டப்படுபவர்களை மதிக்க வேண்டும் !




ஒரு இளைஞன் நன்றாகப் படித்து, ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். அவன் முதல் நேர்முகத் தேர்வை நன்றாகவே செய்தான். அந்த கம்பெனியின் நிர்வாகி, இறுதி நேர்முகத் தேர்வை நடத்தி தன் முடிவை எடுத்தார். நிர்வாகி இளைஞனின் விண்ணப்பித்திலிருந்து தெரிந்துக் கொண்டது யாதெனில், அவன் பள்ளிப் படிப்பிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை ஒரு வருடம் கூட குறைந்த மதிப்பெண்கள் பெற்றதில்லை. நிர்வாகி அவனிடம்,  உனக்குப் பள்ளிக்கூடத்தில்  “படிப்பு உதவித் தொகை” ஏதேனும் கிடைத்ததா என வினவினார். அதற்கு அவன் “இல்லை” என்று பதிலளித்தான். அப்படியானால், “உன் தந்தை பள்ளிக்குத் தொகை கட்டினாரா?” என நிர்வாகி கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “எனக்கு ஒரு வயது இருக்கும் போதே என் தந்தை இறந்து விட்டார்.  என் தாயார் தான் என்னை பார்த்துக் கொண்டார்” என்றான். தாயார் எங்கு வேலை செய்கிறார் என்று நிர்வாகி விசாரித்தப் பொழுது, அவன் “என் தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்தும் துணிகளை வெளுக்கும் வேலைகளை செய்கிறார்” என்று பதிலளித்தான்.  அதற்கு நிர்வாகி இளைஞனிடம் அவனது கைகளைக் காண்பிக்கச் சொன்னார். கைகள் மிருதுவாகவும், சுத்தமாகவும் காணப்பட்டன. உடனடியாக நிர்வாகி, “உன் தாயாருக்குத் துணி வெளுப்பதில் எப்போதேனும் ஏதாவது உதவி செய்திருக்கிறாயா?” எனக் கேட்டார். அந்த இளைஞன் மறுத்தவாறே, “என் தாயார் படிப்பில் மென்மேலும் அக்கறையை செலுத்தச் சொன்னார்” என்று கூறினான். நிர்வாகி இளைஞனிடம் ஒரு வேண்டுக்கோள் விடுத்தார். அன்று இரவு தாயாரின் கைகளை சுத்தப்படுத்த உதவி செய்து, மறுநாள் காலை அவரை சந்திக்குமாறு கூறினார். இளைஞன் மனதில் யோசனை செய்துக் கொண்டே, தனக்குக் கட்டாயம் இந்த வேலை கிடைத்து விடும் என்ற பூரிப்பில் வீடு சென்று தாயாரின் கைகளை சுத்தப்படுத்த அவா கொண்டான். தாயாருக்கு ஒரு புறம் சந்தோஷமும், மறு புறம் பயமும் தோன்ற, கைகளை மகனிடம் காட்டினார். அவன் தாயாரின் கைகளை நிதானமாக சுத்தப் படுத்தத் தொடங்கினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாகத் தாயாரின் கைகளில் விழத் தொடங்கியது. தாயாரின் கைகளின் சுருக்கங்களையும், காயங்களையும் முதன் முறையாக மகன் கண்டான். சில காயங்களின் வலி மிக அதிகமாக இருந்தது. தண்ணீர் பட்டதும் தாயார் சிலிர்க்கத் தொடங்கினார். இளைஞன் முதல் முறையாகத் தன் கல்விக்காகத் தாயார் பட்ட துயரங்களை அறிந்தான். அவன் தாயார் செய்த தியாகங்களை நினைவுப் படுத்திக் கொண்டு, கையில் இருக்கும் காயங்களை நினைத்து வருந்தி,  தன் மேற்படிப்பிற்கும், எதிர் காலத்திற்கும், அவன் தாயார் துணி வெளுத்து கஷ்டப் பட்டதை புரிந்துக் கொண்டான். கைகளை சுத்தப்படுத்தியப் பிறகு, மீதியிருந்த துணிகளைத் தானே துவைத்து வைத்தான். தாயும், மகனும் அன்று இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை இளைஞன் காரியாலயத்திற்குச் சென்று நிர்வாகியை சந்தித்தான். இளைஞனின் கண்ணீரைக் கண்டதும், நிர்வாகி அவனிடம் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார். அவன் எண்ணத்தை நிர்வாகி கேட்டப் போது, இளைஞன் “முதலாவதாக பாராட்டு என்றால் என்னவென்று அறிந்தேன். தாயாரின் உழைப்பு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு என்னால் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. இரண்டாவதாக, தாயாருடன் சேர்ந்து எப்படி உதவி செய்வது என்று அறிந்தேன். ஒரு காரியம் வெற்றி அடைய என்னென்ன துன்பங்களை சந்திக்க வேண்டும் என புரிந்து கொண்டேன். மூன்றாவதாக, குடும்பம், உறவு இவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்தேன்” என்று சொன்னான். நிர்வாகி, “பிறருடைய வேலையைப் பாராட்டி, அவர்களின் கஷ்டங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு நபரையே தேர்வு செய்ய எண்ணினேன். பணம், செல்வம் தான் லட்சியம் என எவரும் எண்ணக் கூடாது. நான் உன்னைத் தேர்வு செய்கிறேன்” என்று கூறினார். பிற்காலத்தில் அந்த இளைஞன் நன்று உழைத்து தன் கீழ் வேலைச் செய்வோரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றான். எல்லோரும் ஒன்றுச் சேர்ந்து கூட்டாக வேலை செய்து கம்பெனியின் பெயரையும் உயரச் செய்தனர்.

No comments:

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 012

நிறைய நேரங்களில் பிரபஞ்சத்திடம் வேண்டுவது தவறு என்று தோன்றுகிறது. உண்மை என்னவென்றால் யாருக்கு இந்த விஷயங்களை கொடுக்க கொஞ்சமும் தகுதி இல்லையோ...