𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 16 ஜனவரி, 2025

ARC - 070 - சர்வைவல் பண்ணுவதே ஒரு சாதனைதான் !


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சுக்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான். மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது எலி. மனம் உடைந்து போனான் இளவரசன். அப்போது அங்கு வந்த அரசர் “ஏன் சோகமாக இருக்கிறாய்?” எனக் கேட்க, “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!” என்றான். மன்னர் சிரித்துவிட்டு “எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டுவந்தாலே போதுமே!” என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்துச் சென்றது. இப்போது இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். “என்ன அரசே. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அரசர் நடந்ததைக் கூறினார். அதற்கு, “நம் நாட்டு பூனைகள் எதற்கும் லாயக்கில்லை. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலியளவு உயரம் கொண்டவை. எனவே அங்கிருந்து வரவழைப்போம்” என்றார் மந்திரி. உடனே அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக் கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. ‘எலிக்கு இவ்வளவு திறமையா!’ என அனைவரும் வியந்தனர். அப்போது அங்கே இருந்த அரண்மனைக் காவலன் “இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதற்கு? எங்கள் வீட்டுப் பூனையே போதும்” என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. “அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது, சாதாரண வீட்டுப் பூனையால் முடியுமா?” என்றார். இளவரசர் அவரை இடைமறித்து, “சரி… எடுத்து வா உனது பூனையை” என்றார். வீட்டுக்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் ‘லபக்’ என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது என்று வியந்தார். இதுபற்றி காவலனிடம் கேட்டார். அதற்குக் காவலாளி “என் பூனைக்கு பெரிதாக திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே… என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்” என்றான். உடனே இளவரசருக்கு சுரீர் என்றுரைத்தது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?.
ஆக, எந்த ஒரு வேலையையும் வெற்றி கரமாகச் செய்து முடிக்க வேண்டுமென் றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும் என்பதை இளவரசர் தெரிந்து கொண்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக