𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 7 ஜனவரி, 2025

ARC - 035 - கொடிய செயல்களின் விளைவுகள் !


 இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை அடித்து உதைத்து பயமுறுத்தி மிரட்டி பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான். பிறருக்குத் தொல்லை கொடுத்து இன்பம் பெறும் ஒரு வகையான ஸாடிஸ்ட் அவன். மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். இந்த கொடியவனுக்கு நேர் எதிராக அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. "ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர் போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு. ஒரு பெரியவர் குடிகார மகனையும், நல்ல குடும்பவான் ஆகியவனையும் இப்படி கேட்டார். "உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?". இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்". "உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். நான் வாங்கிய அடிகளுக்குப் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் அவரால் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான். "உன் அப்பா என்ன செய்தார்", என்று நற் கணவானைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அதனாலே நான் குடிக்ககூடாது, குடிகாரனாகிவிடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இராமல் என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான். எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு. எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக