𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 30 டிசம்பர், 2024

GENRAL TALKS - ஒரு பழைய கதை - சமூகத்தில் மாறாத ஒரு விஷயம் !



ஒரு அரசன் இருந்தார். அதிகாலை எழுந்ததும் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவர் வழக்கம் போல அன்றும் சாரளத்தைத் திறந்த அவருக்கு ஏமாற்றம். மப்பும் மந்தாரமுமாக இருந்த வானத்தில் சூரியனைக் காணவில்லை. கண்களைக் கீழே இறக்கிய போது தூங்கி எழுந்து சோம்பல் முறித்த ஒரு பிச்சைக்காரனைக் கண்டார். அரசனைப் பார்த்ததும் அவன் கண்களில் ஒளி பிறந்தது. “அரசே” என கையெடுத்துக் கும்பிட்டு மண்டியிட்டான். ஆனால், அரசனின் மனநிலை வேறுவிதமாக இருந்தது. “போயும் போயும் இவன் முகத்திலா விழித்தோம்“ என்று வெறுப்புடன் திரும்பினார். அரசர் திரும்பிய வேகத்தில் அரண்மனை தூண் அவரது தலையை பதம் பார்த்து விட்டது. அடிபட்ட இடத்தில் இருந்து இரத்தம் வழியத் தொடங்க, அரசருக்கு வந்ததே கோபம். பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட் ட்டார். காவலர்கள் பிச்சைகாரனை இழுத்துவந்து அவர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. "இந்தக் கேடு கெட்ட முகத்தில் விழித்த எனக்கு கிடைத்த பரிசைப் பாருங்கள். எனது காயத்துக்கு காரணமாக இருந்த இவனை தூக்கிலிடுங்கள்." என்று அதிரடியாக தண்டனை கொடுத்தார் அரசர். உதவி கிடைக்கும், வாழ்க்கை வளமாகும். அரசர் ஏதோ தனக்கு அள்ளித்தரப் போகிறார்.” என்று கனவோடு வந்த பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி தான். ஆனால், அவன் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் பழகிப் போனதால் அவன் கலங்கவில்லை. அவன் வாழ்க்கையில் இழப்பதற்கு ஏதும் இல்லை. குடும்பமா, குட்டியா? ஒரு வேலை கஞ்சி தானே பிரச்சனை. எனவே மன்னனை எதிக்கத் துணிந்தான்.  பிச்சைக்காரன் கலகலவென சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைத்தனர். அரசனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. "பைத்தியக்காரனே! சாகுமுன்பு ஒருமுறை சிரித்துக்கொள்ள நினைத்தாயா?" என கோபமாகக் கேட்டார். பிச்சைக்காரன் நிதானமாக சொன்னான். " அரசே! என் முகத்தில் விழித்ததனால் உங்கள் தலையில் சிறு காயமே ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் விழித்ததனால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன். சிரித்தேன். கேடு கெட்ட முகம் எதுவென்று எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்" என்றான். மன்னனின் தலை அவமானத்தால் கவிழ்ந்தது. தனது தவறை உணர்ந்து தண்டனையை ரத்து செய்தான். பிச்சைகாரனுக்கு உணவும் உடையும் பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான். பிரச்சனையான நேரத்தில் அழுது புலம்புவதை விட்டு, தீர்வைத் தேடுவதே புத்திசாலித்தனம். ஆபத்துக் கால தன்னம்பிக்கை உயிரையும் காக்கும். வேண்டுமென்றே தவறு செய்பவர்களிடம் கெஞ்சி புலம்புவதில் எந்த பயனும் இல்லை. நேருக்கு நேராக மோதுவது போல அடித்து பேசுவதுதான் வேலைக்கு ஆகிறது. குறிப்பாக உயரத்தில் இருந்து நம்மை கீழாக பார்ப்பவர்கள் கண்டிப்பாக நம்முடைய நன்மைக்கு உதவவே மாட்டார்கள். நாம்தான் நம்மை இத்தகையை மமதை பிடித்த முட்டாள்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக